Tuesday, November 26, 2013

எதற்காக அழுதாள்?

க்கத்து வீட்டு குழந்தை அழுது  கொண்டிருந்த சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்தேன். அதை அந்த வீட்டுகாரர்கள் யாரும் கண்டு கொண்டது போல தெரியவில்லை. மெதுவாக வீட்டுக்குள் எட்டி பார்த்தேன். உலகமே தெரியாமல் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர்.

“அக்கா குழந்தை அழுது பாருங்க”

“அது அப்பிடித்தான் தம்பி. கொஞ்ச நேரத்துல நிறுத்திடும்.”

சற்றும் அலட்டி கொள்ளாமல் பதில் வந்தது.

“நான் வேணும்னா கொஞ்ச நேரம் தூக்கிட்டு வெளியே போய்ட்டு வரவா?”

“ம்”

என்ன ஆட்கள் இவர்கள் என்று நினைத்து கொண்டு அந்த குழந்தையை தூக்கி கொண்டேன்.

“பாப்பா! உன் பேர் என்னமா?”

அது சட்டைசெய்யாமல் அழுது கொண்டே இருந்தது. யாரோ அடித்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி அழ வாய்ப்பில்லை. அந்த குழந்தையை பார்க்க இப்போது எனக்கு பாவமாக இருந்தது.

“மாமா மிட்டாய் வாங்கி தரேன். அழ கூடாது என்ன?”

லேசாக அதன் அழுகை குறைந்தது போல் இருந்தது.

“உன் பேர் என்ன சொல்லு?”

“திவ்வ்வ்யா.” விசும்பலுக்கு இடையே அது சொன்னதை புரிந்து கொண்டேன்.

“எதுக்கு அழுகுற. யாரு அடிச்சா உன்னை?”

“யா...யா” மீண்டும் அழ தொடங்கியது. இந்த கேள்வியை நான் கேட்டு இருக்க கூடாது போலும். பாவம் இந்த கால குழந்தைகள். இந்த வயதிலேயே படிக்க சொல்லி அடித்து உதைத்து.

“சரிமா! அழாத. மிட்டாய் வாங்கி தரேன்.”

கடையை நெருங்கியதும் அதன் அழுகை மிகவும் குறைந்து இருந்தது. நான் கடையில் இருந்த ஒரு ஐம்பது பைசா மிட்டாய் பாட்டிலை திறந்து  ஒரு மிட்டாயை எடுத்தேன்.

“மாமா! இது வேணாம். முட்டை மிட்டாய் வேணும்.” அவள் முட்டை போல இருந்த ஒரு மிட்டாய் பாட்டிலை கை காட்டினாள்.

“அந்த சாக்லேட் ஒன்னு எடுங்க” வாங்கி அவள் கையில் கொடுத்தேன்.

“முப்பது ரூபாய் கொடுங்க சார்.” 

“என்ன முப்பது ரூபாயா?” அவசரமாக அந்த மிட்டாயை அவளிடம் இருந்து
பிடுங்க போனேன். அதற்குள் அதை  பாதி பிரித்து விட்டு இருந்தாள். வேறு வழி இல்லாமல் முப்பது ரூபாயை எடுத்து நீட்டினேன். எனக்கு இது தேவைதான்.
 
“இனிமே நல்லா படிக்கணும். அதான் அம்மா அடிக்க மாட்டாங்க”

“அம்மா என்னை எப்பவுமே அடிக்க மாட்டாங்க மாமா”

“அப்புறம் யாருதான் அடிச்சா?”

“யாருமே என்னை அடிக்கல.”

“கீழ விழுந்துட்டியா?”’

“இல்ல”

“யாரும் திட்டுனாங்களா?”
 
“ம்ஹும்"

“நீ மிட்டாய் கேட்டு வாங்கி தரலையா?”

“நான் கேட்டா இல்லன்னே சொல்ல மாட்டாங்க”

“அப்புறம் ஏன்தான் அழுத?” என்றேன். எரிச்சலுடன்.

“அந்த பலூன் வாங்கி குடு. சொல்றேன்.” பலூன் விற்று சென்றவரை கை காட்டியது.

குழந்தையா இது. இந்த வயதிலேயே வியாபாரம் பேசுகிறது. இருந்தாலும் என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. எதற்காக இது அப்படி அழுதது. வீட்டில் யாருமே கண்டு கொள்ளவில்லையே. அது ஏன்?

நேராக சென்று ஒரு பலூனை வாங்கி அவள்  கையில் திணித்தேன். இன்று ஐம்பது ரூபாய் மொய் எழுத வேண்டும் என தலையில் எழுதி இருக்கிறது போலும் 

. “சொல்லு! ஏன் அழுத?”

“கும்கி யானை செத்துப்போச்சு. அதான்”

“கும்கி யானையா?”

அதற்குள் அவளின் வீடு வந்து விட்டது. அவளின் தாய் வாசலிலேயே நின்று இருந்தார்.

“உங்க கிட்ட பலூன் கேட்டுட்டாளா. இவ எப்பவுமே இப்படிதான் தம்பி . விஜய் டிவில கும்கி படம் போடுறப்ப விடாம  பார்க்கிறது.  கடைசில யானை செத்து போனதும் அழறது.  எதாச்சும் வாங்கி குடுத்தா அமைதி ஆகிடுறது” அவர் குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே நடக்க தொடங்கினார். பிரபு சாலமன் கும்கி யானையை கொன்றதற்காக முதல் முறையாக நான் வருத்தப்பட தொடங்கினேன்
.

4 comments:

  1. குழந்தையின் மனம் எவ்வளவு பாதிப்பு அடைகிறது...!

    ReplyDelete
  2. இது உண்மையா இல்லை உங்களின் கற்பனையா என்று தெரியவில்லை. எப்படி ஆயினும் அருமையான எழுத்து நடை. தங்களின் ப்ரொஃபிலை பார்க்க இயலவில்லை நீங்கள் எழுத்தாளராக இருப்பின், தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. கும்கி படத்தை பார்த்த பின் குழந்தை அழுதது என்று நண்பர் சொன்னதில் இருந்து நூல் பிடித்து நிறைய கற்பனை கலந்து எழுதப்பட்டது.

      நான் எழுத்தாளரெல்லாம் இல்லை நண்பரே. (ப்ளாக்) எழுத ஆரம்பித்து இன்னும் ஓராண்டு கூட நிறைவு ஆகவில்லை. கத்துக்குட்டி தனமாக மனதில் தோன்றியதை எல்லாம் .இங்கே கிறுக்கி கொண்டிருக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...