Monday, February 3, 2014

கேப்டனின் ஊழல் எதிர்ப்பு மாநாடு

ரம்பிக்கும்போதே "நான் கொஞ்சம் முன்ன பின்ன பேசுவேன். நீங்களே கோர்த்துகோங்க" என்று ஆரம்பிக்கிறார். பின்னர் தனது வலது பக்கம் யாரையோ பார்த்து என்னவோ சொல்கிறார். விழிப்புடன் இருக்கும் 'கேப்டன்'  டிவி ஊழியர்கள் அவர் பேசுவது கேட்காமல் குரலை கட் செய்து விட்டு ஒரு பாடலை ஒலிக்க விடுகின்றனர். மீண்டும் அவர் குரல் கேட்கும்போது யாரோ ஒரு காவல் துறை அதிகாரியை திட்டுகிறார். தான் காவல்துறை அதிகாரியாக அதிக படங்கள் நடித்ததை எண்ணி வெட்கப்படுவதாகவும், இனி தானோ, தன் மகனோ போலீசாக எந்த படத்திலும் நடிக்க மாட்டோம் என்று சூளுரைக்கிறார். 

பின் அவர் ஆரம்பிக்கும்போதே சொன்னது போல தொடர்ச்சியற்ற கருத்துகள். ஜெயலலிதாவை திட்ட சில நிமிடங்கள், தன்னுடைய தொண்டர்களின் பலம் பற்றி சில நிமிடங்கள், தன்னை குடிகாரன் என்று சொல்பவர்களுக்கு பதிலளித்து சில நிமிடங்கள், சுய புராணம் சில நிமிடங்கள் , தொண்டர்களை பத்திரமாக ஊர் திரும்ப சொல்லி சில நிமிடங்கள், கூட்டணி பற்றி சில நிமிடங்கள்,  ஊழல் எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைத்து விட்டோமே என்று ஊழலை பற்றி ரெண்டு வரிகள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிறுகிறுக்க வைத்து விட்டார் விஜயகாந்த்.  எந்த வித முன் தயாரிப்பும் இன்றி அவரிடமிருந்து  வந்த வார்த்தைகளை ஒரு சினிமா  எடிட்டர் போல  வெட்டி, ஒட்டி அவரின் தொண்டர்களும் புரிந்து கொண்டார்கள். நடுநடுவில் அவர் சீறிய போதெல்லாம் அவர் குரலை தொலைகாட்சியினர் கட் செய்து விட்டனர்.


அரசியல்வாதிகளின் மூலதனமே பேச்சுதான். இத்தனை அனுபவம் வாய்ந்த கலைஞரே கூட தயாரிப்பு இல்லாமல் எந்த மாநாட்டிலும் பேசுவது போல தெரியவில்லை. சில நேரங்களில் காகிதத்தில் எழுதி  வந்தும் வாசிப்பார். இப்போது விஜயகாந்தின் அவசர தேவை அவர் பேசவேண்டியதை எழுதி தர கூடிய ஒருவர். அப்படி ஒருவரை விஜயகாந்த் கண்டு பிடித்து பயன்படுத்தினால் அவருக்கு அரசியலில் பெரிய வெற்றி பெற கூடிய சாத்தியம் இருக்கிறது. செய்ய தவறினால் அவருக்கு இயல்பாகவே அமைந்த வாய்ப்பை அவரே வீணடிக்கிறார் எனலாம்

விஜயகாந்த் பேசியது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அதென்ன கட்சி தொடங்கி இதனை ஆண்டுகளுக்கு பின் ஊழல் எதிர்ப்பு? ஆம் ஆத்மியின் அதிரடி வெற்றி விஜயகாந்தை யோசிக்க வைத்து இருக்க வேண்டும். கெஜ்ரிவாலை போல அவரும் ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்து ஒரு மாநாடும் நடத்தி விட்டார். அதில் வியக்க வாய்த்த விசயம் அவர் சேர்த்த கூட்டம். எங்கிருந்து இத்தனை பேரை கூட்டினார் என்று அவரின் கட்சியினருக்கே வெளிச்சம். அதை விட பெரிய விஷயம் தன் தொண்டர்களிடம் கருத்து கேட்டு கூட்டணி இல்லை என்று சொன்னது. அந்த அறிவிப்பு தன்னுடைய டிமாண்டை அதிகரிக்கும் உத்தியா அல்லது உண்மையான அறிவிப்பா என்று போக போகவே தெரியும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். விஜயகாந்த் எப்போதும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அரசாங்க அதிகாரிகள் கடவுளை வேண்டி கொள்வார்கள். ஏனென்றால் முதல்வரை சந்திக்க போகும்போது,  தலைமை ஆசிரியரை பார்க்க போகும் பள்ளிகூட பையன் போல எப்போது அடி கிடைக்கும் என்று  பயந்து நடுங்கி கொண்டேதானே போக வேண்டியது இருக்கும். 


5 comments:

  1. முடிவில் சொன்னது உண்மை தான்...!

    ReplyDelete
  2. தமிழக அரசியல் ஹிரோவாக வரவேண்டியவர் அரசியல் கோமாளியாகி விட்டார்.

    ReplyDelete
  3. \\அதென்ன கட்சி தொடங்கி இதனை ஆண்டுகளுக்கு பின் ஊழல் எதிர்ப்பு? ஆம் ஆத்மியின் அதிரடி வெற்றி விஜயகாந்தை யோசிக்க வைத்து இருக்க வேண்டும்.\\ அட ....ஆமாம்...............!!

    \\ஏனென்றால் முதல்வரை சந்திக்க போகும்போது, தலைமை ஆசிரியரை பார்க்க போகும் பள்ளிகூட பையன் போல எப்போது அடி கிடைக்கும் என்று பயந்து நடுங்கி கொண்டேதானே போக வேண்டியது இருக்கும்.
    \\ MGR -ரிடம் பெல்டால் அடி வாங்காத அமைச்சர்கள் சொற்ப்பமாமே?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...