Monday, July 28, 2014

ஒரு மல்டிலெவல் மார்க்கெடிங் ஏஜெண்டும், நானும்

துரங்க வேட்டை”யில் மல்டிலெவல் மார்க்கெடிங் பற்றி காண்பித்து இருந்தார்கள். பார்த்தபோது எனக்கு நான் சந்தித்த ஒரு மல்டிலெவல் மார்கெடிங் ஏஜென்டின் நினைவு வந்தது. பணத்தின் மேல் பேராசை கொண்ட ஒருவரை எப்படி வேண்டுமானாலும்  மூளைசலவை செய்யலாம் என்பதை அவர் மூலமே முதலில் தெரிந்து கொண்டேன்.

ஒரு நாள் வழக்கப்படி மாட்டுத்தாவணியில் இருந்து ஊருக்கு திரும்ப பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடித்து அமர்ந்தேன். பேருந்து கிளம்ப சில நிமிடங்கள் இருந்தது. கவனத்தை இளையராஜா பாடலில் திருப்பி பேருந்தில் ஏறுபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

சில நிமிடங்களில்  வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். எனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார். எனக்கு அவர் என்னையே பார்ப்பது போல தோன்றியது. நான் நினைத்தது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் என் இடம் மாறி என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

“உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு._______ பள்ளிகூடத்துலதான படிச்சீங்க?” தனது முதல் கேள்வியை வீசினார்.

“ஆமாங்க. நீங்களும் அங்கதான்  படிச்சீங்களா?”

“இல்ல. ஆனா எங்க வீடு அந்த தெருலதான் இருக்கு. அதான் உங்களை பார்த்த மாதிரி இருக்கு போல”

ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் அந்த பள்ளிகூடத்தில் என்னை பார்த்தது போல இருக்கிறது என்றால் என் முகத்தில் ஏதோ களை இருக்கிறது போல என்று எண்ணி பெருமைபட்டு கொண்டேன். வழக்கமாக என்னை பார்த்தாலே பயந்து ஓடுபவர்கள் மத்தியில் என்னை தேடி வந்து ஒருவர் பேசுகிறார் என்ற சந்தோசம் வேறு.

“ஆமா...ஆமா...சரி நீங்க இப்போ என்ன பண்றீங்க?” நட்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் முயற்சியில் இறங்கினேன்


“நான் தமிழ்நாடு மின்வாரியத்துல வேலை செய்யுறேன்”

“ரொம்ப பிஸியான வேலைதான். நேரத்துக்கு கரண்ட் கட் பண்ணனும்.”

“அத்தனை பிஸி எல்லாம் இல்லைங்க. நாங்க நேரத்துக்கு கரண்ட் கட் பண்ணாம போனாலும் கரண்ட் அதுவாவே நின்னுடும்.” சிரித்து கொண்டே பதில் உரைத்தார். எனக்கு  ஒன்றரை மணி நேரத்துக்கு  சரியான பொழுதுபோக்கு கிடைத்ததை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன். அப்படியே தமிழ்நாட்டில் மின் நிலவரத்தை இவர் மூலம் தெரிந்து கொண்டு விட வேண்டியதுதான்.

“ஆமா! இந்த கரண்ட் கட் எல்லாம் சரி பண்ணவே முடியாதா?”

“அதெல்லாம் வாய்ப்பே இல்லைங்க. கூடங்குளம் வந்தா சரி ஆகிடும்னு சொல்றாங்க. ஆனா அதெல்லாம் சும்மா. சரி நீங்க எங்க வேலை பாக்குறீங்க?”

“எனக்கு கவர்மென்ட் உத்தியோக யோகம் எல்லாம் இல்லை. மதுரைல ஒரு பிரைவேட் கம்பெனில வேலை”

“சம்பளம் எவ்வளவு வாங்குறீங்க?” அடுத்த கேள்வியில் அதிர்ச்சி அளித்தார். பழகிய பத்தே நிமிடங்களில் சம்பளம் கேட்கிறாரே. அரசாங்க ரகசியத்தை எல்லாம் நான் கேட்டிருக்க கூடாதோ? சில நொடிகள் குழம்பி சம்பளத்தை தவறாக சொல்ல முடிவு செய்தேன்.

“என்னங்க ஒரு பத்தாயிரம். அதுலயும் அப்பிடி இப்பிடி பிடிச்சு ஒரு எட்டு நெருங்கிதான் கைக்கு வரும்”

அவர் முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தது.

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க? இன்ஜினியரிங்தானே”

“ஆமா”

“பாருங்க இன்ஜினியரிங் படிச்சு எட்டாயிரம்தான் வாங்குறீங்க. உங்க முதலாளி உங்களை விட கம்மியாதான்  படிச்சு இருப்பார். ஆனா எவ்வளவு சம்பாதிக்கிறார். எப்பிடின்னு நினைக்கிறீங்க”

உண்மையில் என் எம்.டி  இங்கிலாந்து சென்று பல பட்டங்களை வாங்கியவர். எனக்கு என்னமோ அதை அவரிடம் சொல்ல பிடிக்கவில்லை.

“அவர் திறமைசாலி அதான்”

“திறமைதான். ஆனா அவர் திறமை என்னன்னா அவருக்கு மத்தவங்க நேரத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தெரிஞ்சு இருக்கு. உங்க நேரத்தை எடுத்திகிட்டு உங்களுக்கு பணம் தரார். ஆனா அதை விட அதிக பணம் உங்க நேரத்துல அவர் சம்பாதிக்கிறார். நேரம்தான் எல்லாம். உங்க நேரத்தை நீங்களே பயன்படுத்திகிட்டா நீங்களும் அதிக பணம் சம்பாதிக்கலாம்”

அவர் பேசுவது யாரோ சொல்லிக் கொடுத்து பேசுவது போல தெரிந்தது.

“அதெல்லாம் எதுக்குங்க. சம்பளம் வருது அது போதும்”

“இப்போ உங்களுக்கு இது போதும். நாளைக்கு? இன்னும் இருபது வருஷம் கழிச்சு முப்பதாயிரம் வாங்குவீங்க. அது போதுமா? இப்போ நான் உங்களுக்கு உங்க நேரத்தை எப்படி பணமாக்குறதுன்னு இப்போ உங்களுக்கு  சொல்லித்தரேன்”

அவர்  நோக்கம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது.

“ஆம்வேயா? மோடிகேரா?”

“ஆம்வேலாம் இல்லை. மோடிகேர்தான். இப்போ  நான் பெரிய தொழிலதிபர்களை உருவாக்குற முயற்சியில இருக்கேன். அப்பிடியே கம்பெனியோட சோப்பு, ஷாம்பூ விக்கணும். எம்.எல்.எம்தான் நம்ம நேரத்தை பணமாக்குற வழி ”

“எம்.எல்.எம் கான்செப்டே தப்புங்க. இப்பிடி ஒவ்வொருத்தரும் பத்து பேரை சேர்த்து விட்டா கடைசில எல்லாருமே விக்கிறவங்க ஆயிடுவாங்க. அப்புறம் அந்த பொருளை எல்லாம் கடைசில யாருதான் வாங்குறது?”

இதை கேட்டதும் கடகடவென்று சிரித்தார்.

“இன்ஜினியரிங் எப்பிடி பாஸ் ஆனீங்க. இது கூட புரியல. அது அப்பிடி இல்லங்க”

“அது எப்பிடியோ நம்ம ஊருக்கு  இதெல்லாம் ஒத்துவராது. ரொம்ப காஸ்ட்லி ப்ராடக்ட் . இங்கெல்லாம் அதை யாரு வாங்குவா, ரெண்டு ரூபா சாஷேல ஷாம்பூ வாங்கி குளிச்சா போதும்னு சொல்லிடுவாங்க”

அவர் முகம் மாறியது.” நீங்க எப்பவாச்சும் இவங்களோட டூத் பேஸ்ட்டை யூஸ் செஞ்சு இருக்கீங்களா. யூஸ் செஞ்சு பாருங்க. அப்புறம் இப்பிடி பேச மாட்டீங்க”

“அதெல்லாம் எதுக்குங்க. நமக்குதான் கோபால் பல்பொடி இருக்கே?”

“கோபால் பல்பொடியா?”

“என்ன முகத்தை சுருக்குறீங்க? பெரிய மல்டி நேஷனல் கம்பெனி தெரியும்ல. மலேசியா, சிங்கப்பூர், இலங்கைன்னு பெரிய மார்க்கெட்.”

அவர் வெறுப்பு அடைவது நன்றாக தெரிந்தது.

“சார்! நீங்க எல்லாத்தையும் தப்பா புரிஞ்சு இருக்கீங்க. மதுரைல ஒரு டாக்டர் இப்போ எம்.எல்.எம்ல  மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கிறார். இதை வச்சே கார் எல்லாம் வாங்கிட்டார். இந்த வாரம் ஞாயித்துக்கிழமை மதுரைல ஒரு மீட்டிங் இருக்கு. போய் கலந்துக்குங்க. அந்த டாக்டர் பேசுறதை கேட்டதும் உங்களுக்கே புரியும். அப்பிடியே என்னோட பேரை அங்கே ரெபரன்ஸ்னு குடுத்துடுங்க”

“டாக்டர் பேஷண்டுக்கு உங்க கம்பெனி  சோப்பையும், ஷாம்பையும் பிரிஷ்க்ரிப்சன் எழுதி கொடுத்து வித்துடுவார். நான் எப்பிடி விக்கிறது. தவிர இந்த வாரம்  ஞாயித்துக்கிழமை நான் ரெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இதே மாதிரி எம்.எல்.எம்ல  ட்ரை பண்ணி காசை விட்ட நிறைய பேரை எனக்கு தெரியும்.”

அவர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் என்பது அவரின் கண்களில் தெரிந்தது.

“சரி உங்க நண்பர்கள் போன் நம்பர் இருந்தா குடுங்க. யாராச்சும் இதுல இன்ட்ரஸ்ட் காமிக்கலாம்”

“எனக்கு நண்பர்களே இல்லீங்க. அப்பிடி யாரையும் நான் வச்சுகுறதே இல்ல.”

“நீங்க நெகட்டிவாவே வளர்ந்துட்டீங்க, அதான் உங்களுக்கு நண்பர்களே இல்லை. இப்படி யோச்சிக்கிறவரை நீங்க வாழ்க்கையில  முன்னேறவே மாட்டீங்க” இப்பொழுது கோபம் வார்த்தைகளில் வந்து விழுந்தது. அவரின் விலைமதிப்பில்லாத நேரத்தை நான் வீணடித்து விட்டது காரணமாக இருக்கலாம்.

அடுத்த முப்பது நிமிடங்கள் ஊரை அடையும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. எனக்கு அதில் சந்தோசம்தான் . ஊர் வந்ததும் திரும்பி பார்க்காமல் இறங்கி சென்று விட்டேன்.

இது நடந்து நான்கு வருடங்கள் இருக்கும். இப்போது ஊரில் புதியதாக  கார் எதுவும் ஓடுவதாக தெரியவில்லை. மூன்றே மாதங்களில் எதார்த்தம் புரிந்த பின் அவர் எம்.எல்.எம் தொழிலை விட்டு இருக்கலாம். ஆனால் அதற்குள் அவர் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் தன்னைவிட்டு விலகி ஓட வைத்து இருப்பார். அவருக்கு எதார்த்தம் புரிய வைத்ததில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே.


2 comments:

  1. அருமையாக தப்பித்தீர்கள்!

    இப்படிப்பட்ட ஆட்கள் முதலில் தொடங்குவது ஒரு பிசினஸ் இருக்கு நீங்க பண்ண வறீங்களான்னு தான், இந்த கும்பலில் மாட்டிய அப்பாவிகளில் நானும் ஒருவன்!
    நேரம் மேனாம்னையை பற்றி அவர் பேசி என்னிடம் மாட்டிகொண்டார்.

    என்னுடைய வாழ்க்கையில் வீணாய் போனது உங்களுடன் செலவழித்த நேரம் தான் என்று வசமாக திட்டிவிட்டு வந்தேன்!

    இப்படி பட்டவர்கள் மாட்டினால்
    https://www.youtube.com/watch?v=eX8zHYVPEzs இந்த லிங்கை காட்டுவேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்..கருத்துக்கு நன்றி நண்பரே..

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...