Wednesday, February 4, 2015

உலகக்கோப்பை இந்திய அணி - ஒரு பார்வை

லகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  நெருங்கி விட்டது. இந்த முறை இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. லீக் சுற்றை தாண்டி முன்னேறினாலே பெரிய சாதனை என்ற அளவிலேயே அணியின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்து விட்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்ரிக்க அணிகள் நல்ல பார்மில்  உள்ளன. இந்திய அணியோ  பேட்டிங்கில் பலவீனமாகவும், பந்து வீச்சில் மிக  பலவீனமாகவும் உள்ளது.

இந்திய அணியின் வீரர்களை பற்றி பார்க்கலாம். முதலில் சிகர் தவான். நீ எப்படி வேண்டுமானாலும் பந்து வீசிக் கொள் , நான் அவுட் ஆகி காட்டுகிறேன் பார் என்ற ரீதியில் ஆடிக் கொண்டிருக்கிறார். சமீப காலங்களில் ஒரே மாதிரி ஆட்டம் இழப்பது இவர் மேலான  நம்பிக்கையை மேலும் குறைக்கிறது.

அடுத்தவர் ரஹானே. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் ஒரு நாள் போட்டிகளில் இவர் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இதுவரை ஒரு நாள் போட்டிகளில் மிகப் பெரிய ஸ்கோர் எதுவும் எடுத்தது இல்லை. துவக்க ஓவர்களில் எதிரணியின் பந்து வீச்சை ஓரளவு சமாளித்தாலும், ரன்களை உயர்த்த முயலும்போது அவுட்டாகி விடுகிறார். இவரிடம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

கோலியை பற்றி கூற வேண்டுமானால் சமீபத்திய முத்தரப்பு தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அதிலிருந்து விரைவாக மீண்டு வந்து ரன் குவிப்பார் என்று நம்பலாம். அவரின் திறமை அப்படிப்பட்டது.

ரோஹித் ஷர்மா ஒரு கணிக்க முடியாத வீரர். எப்போது எப்படி ஆடுவார் என்று கணிக்க முடியாது.  அவருடைய அதிர்ஷ்ட தினத்தில் அணியை தனியாளாக வெற்றி பெற செய்யக் கூடியவர்.

அம்பதி ராயுடு அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாதவர். நன்றாக ஆடக் கூடியவர்தான். இருந்தபோதும் IPL போட்டிகளில் கவனித்தவரை இவர் எளிதில் பொறுமை இழக்க கூடியவர். உலகக்கோப்பையின் பதட்டமான கணங்களை எப்படி கையாளப் போகிறார் என்பது கேள்விக்குறி.

சுரேஷ் ரெய்னா முத்தரப்பு தொடரில் சாதிக்க தவறினாலும் தனது தவறுகளை உணர்ந்து விரைவில்  சரி செய்து கொண்டு விடுவார். உலகக்கோப்பையில் நன்றாக ஆடுவார் என்றே நம்பலாம்.

ஒரு நாள் போட்டிகளில் தோனியின் பேட்டிங் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. இவர் மோசமான பார்மில் இருந்த நாட்கள் மிகக் குறைவு. இவரின் கேப்டன்ஷிப்பும் அணிக்கு மிகப் பெரிய பலம்.

ஜடேஜா நன்றாக பந்து வீசி எதிரணியை திணற செய்வார், ஆனால் சுழலுக்கு சாதகமான பிட்சுகளில் மட்டும். ஆஸ்திரேலியாவில் இவரின் பந்து வீச்சு எதிரணிக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆஸ்திரேலியாவில்  பேட்டிங் எடுபடுவதும் சந்தேகம்தான்.

ஸ்டூவர்ட் பின்னியின் தேர்வு மிகவும் சர்ச்சை கிளப்பிய ஒன்று. ரோஜர் பின்னியின் மகன் என்பதால் வாய்ப்பு பெற்றார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் எனக்கென்னவோ  தோனி போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் இவர் நன்றாகவே ஆடுவார் என்றே தோன்றுகிறது. பந்து ஸ்விங் ஆகும் மைதானங்களில் இவரை சமாளிப்பது கடினம். பேட்டிங்கிலும் விரைவாக இருபது, முப்பது ரன்களை சேர்த்து விடுவார்.

அக்சர் படேலை சுழல் பந்து வீச்சாளர் என்று கூற முடியாது. இருந்தபோதும் விரைவாக நேர்கோட்டில்  பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி விடுவார். ஆஸ்திரேலிய பிட்சுகளில், இவரின் உயரம் பந்துகளை அதிக பௌன்ஸ்  செய்ய உதவும். சுமாராக பேட்டிங் செய்வது கூடுதல் பலம்.

அஷ்வின் பந்து வீச்சில் ஏமாற்ற மாட்டார் என்று நம்புவோம். இருந்தபோதும் ஒரு நாள் போட்டிகளின் புதிய விதிகள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடியவை.

புவனேஸ்வர் குமார் வேகப்பந்து இந்திய வேகப்பந்து  வீச்சில் ஒரே நம்பிக்கை. மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் இவரை நம்பலாம். விக்கெட்டுகள் வீழ்த்த இயலாவிட்டாலும் ரன்களை கட்டுப்படுத்துவார்.

இஷாந்த் ஷர்மாவை பற்றி என்ன சொல்வது? ரிக்கி பாண்டிங் உச்சத்தில் இருக்கும்போது அவரை திணற வைத்ததை தவிர்த்து இத்தனை ஆண்டுகளில் எதுவும் பெரிதாக சாதித்தது போல் நினைவில்லை. சமீபத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியையும், சாம்பியன்ஸ் ட்ராபி பைனலையும் கணக்கில் சேர்க்காதீர்கள். முப்பது போட்டிகளில் விளையாடும்போது ஒன்றிரண்டு போட்டிகளில் தவறுதலாக சில விக்கெட்டுகள் விழுந்து விடும்.

உமேஷ் யாதவும், முஹம்மது சாமியும் நல்ல பந்து வீச்சாளர்கள்தான். ஆனால் மலிங்கா போலவோ, ஸ்டெயின் போலவோ அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சச்சின் இல்லாத குறை அப்பட்டமாக தெரிகிறது. கடந்த உலகக் கோப்பைகளில் அவர் ஒரு முனையில் உறுதியாக நின்று ஆட இன்னொரு முனையில் மற்றவர்கள் அவருக்கு துணையாக தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆடினால் போதும் என்ற வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு இல்லாததால் ஒவ்வொரு வீரருக்கும் அழுத்தம் இருப்பது போல் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். ஒருவர் தொடர்ந்து ரன் சேர்க்க  தவறினாலும் அது அணியின் வெற்றியை பாதிக்கும்.

தன்னம்பிக்கை  குறைவாக உள்ள வீரர்கள் குட்டி அணிகளுடன் ஆடி ரன் சேர்த்து மீண்டும் பார்முக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இருந்த போதும் பந்து வீச்சு மிகவும் கவலை அளிக்கும் விஷயம். இந்திய அணியின் கேப்டன், மற்ற அணிகளின் கேப்டன்களை விட நெருக்கடியான நேரங்களை  சிறப்பாக கையாளக்கூடியவர் என்பதே இப்போதைக்கு அணியின் ஒரே பலம். பார்க்கலாம் வேறு எதாவது அதிசயம் நடக்கிறதா என்று.


1 comment:

  1. எதிர்ப்பார்ப்பு சுவாரஸ்யம் தரும்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...